Thursday, April 28, 2011

ஹஸாரே இனி உண்ணாவிரதம் இருக்க மாட்டார்?

 ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள்,அதிகாரிகள் தனியாகவோ/ கூட்டாகவோ ஊழல்கள் புரிந்து வருகின்றனர்! எந்த நாடும் இதற்கு விதி விலக்கல்ல!

இருந்த் போதிலும் ஜனநாயக முறையைப் பின்பற்றும் உலக நாடுகளில், ஆட்சியாளர்களின் ஊழல் என்பது, இலை மறைவு காய் மறைவாக , அண்ணாதுரை சொன்னதைப் போல் தேனெடுத்துவிட்டு புறங்கையை சுவைப்பதைப் போலவே நிகழ்ந்து வருகிறது!







நமது நாட்டில், மலை முழுங்கி மகாதேவன்கள் ஆட்சியாளர்களாக அமர்ந்து உலக மஹா ஊழல் புரிந்து வருகின்றனர்! பங்கு கிடைக்காத எதிர் கட்சியினர் கூப்பாடு போட்டால், ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு கமிஷன் அமைத்து, கண் துடைப்பு விசாரணை நடத்தி, காலம் கடத்தி, சாட்சியங்களை களவாடி மறைத்து, குற்றத்தை நீர்த்துப் போக வைத்து, எளிதில் தப்பி ஓடி விடுகின்றனர்!

ஆட்சியாளர்களின் ஊழல் போக்கைக் குறைத்து, விசாரணைக்கு  உட்படுத்தி, தண்டனை பெற்றுத் தரும் நோக்கில், " லோக் பால்" என்ற மசோதா, சுமார் 42 வருடங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டு, அரசியல்வாதிகளின் சுயநலத்தால், இன்னும் சட்டமாக்கப் படாமல், கிடப்பில் கிடக்கிறது.

இது குறித்து பொதுநல அரசியல் கட்சிகள் அவ்வப்போது தர்ணா, ஊர்வலம், போராட்டம் என பல நடத்தியும் ஏனோ மக்களை அது சென்றடயவில்லை!


அன்னா ஹசாரே என்னும், மராட்டிய மக்கள் தலைவர் இந்த லோக் பால் மசோதாவின் மேல் அக்கறை எடுத்து, கடந்த ஒரு மாத காலமாக முயற்சி எடுத்து வருகிறார்! சுமார் 20 வருடங்களாக, மராட்டிய மாநிலத்தில் மக்களை வழி நடத்தி, சிறிதும் பெரிதுமாய், நலத் திட்டங்களை நிறைவேற்றிவருகிறார்!

 கடந்த ஏப்ரல் மு தல் வாரத்தில், தலை நகரில் லோக்பால் மசோதா குறித்து, அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, அரசின் கவன ஈர்ப்புக்காக ஹசாரே உண்ணா விரதம் மேற்கொண்டார்!அறிவு ஜீவிகளின் ஆதரவாலும், ஊடகங்களின் கொண்டு சேர்ப்பாலும்,ஹசாரேவின் மேல் எழுந்த நம்பிக்கையாலும், ஊழல் தடுப்பு மசோதாவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு, நாடெங்கும் மக்களிடம் விரைவில் சென்றடைந்து, ஆதரவு அலை பெருகியது!


சிறிது கால தொடர் உண்ணவிரத்தின் பலனாக, அன்னா ஹஸாரெ உட்பட்ட 5 நபர் மக்கள்பிரதிநிதிகள், மசோதாவை இறுதி வடிவம் செய்யும் பொருட்டு, மத்திய அமைச்சர்கள் குழுவோடு, இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர்!

மூட்டுவலி வடிவில் முட்டுக்கட்டை!


தற் போது, அன்னா ஹசாரே தான் மேற்கொண்ட பணியை, சரிவர தொடர முடியாத வகையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது! மூட்டுவலியே அந்த முட்டுக்கட்டை! பல வருடங்களாக மூட்டுத் தேய்வு நோயால் அவதிப் பட்டு வந்த அன்னா, 97 மணி நேர உண்ண விரதத்தால், வலி அதிகமாகி, எலும்பு நோய் நிபுணர் திரு.பராக் சான்செட்டியால்  கடந்த திங்கள் கிழமை பரிசோதிக்கப் பட்டார்!







மருத்துவர் அன்னா ஹசாரேவிடம் வழங்கிய ஆலோசனை!





1. உடனடியாக 5 நாட்களுக்கு கட்டாய ஓய்வு!
2. மேற்கொண்டு உண்ணா விரதமிருக்கக் கூடாது!
3. இரண்டு கால்மூட்டுகளிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவசியம்!
4. பயணங்களைக் குறைக்க வேண்டும்!

காந்தீயவாதி அன்ன ஹசாரே மருத்துவரின் ஆலோசனைக்கு செவி மடுப்பாரா? அல்லது தொடர்ந்து மக்களுக்காக களப்பணியாற்றுவாரா என்பது தற்போது கேள்வியாக உள்ளது! அவரைப் பற்றி அறிந்தவர்கள், முன்னெடுத்த காலை எக்காரணம் கொண்டும் பின்னெடுக்க மாட்டார் என்கின்றனர்!

ஹசாரே குறித்து விமர்சனங்கள் பல எழுந்தாலும், தற்போது அவர் கட்டியுள்ள லோக்பால் எனும் கங்கணத்தை, மக்களுக்கு வாங்கிக் கொடுத்த பின்னரே அவிழ்க்கப் பட வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும்! தனக்கு வேண்டிய சிகிச்சைகளை அவர் பெற்றுக் கொண்டு, மக்களின் தொண்டாற்ற, வழி நடத்த வேண்டுமென, மக்கள் அனைவரும் நம்பிக்கை வைப்போம்!









2 comments:

  1. நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும்.காத்திருப்போம்.

    ReplyDelete
  2. சுந்தர்ஜி!

    வருகைக்கு நன்றி!

    ReplyDelete