Thursday, January 10, 2013

கூடார வல்லியன்று பால்சோறு தின்னும் கும்மாளம் !குதூகலம் !



கண்ணனின் அன்பை வேண்டி..மார்கழி மாதம் முதற்கொண்டு அதிகாலை விழித்து,நாட்காலையில் நீராடி ..நெய்யுண்ணோம் ..பாலுண்ணோம்..மலரும் மற்ற மை அலங்காரமும் செய்யோம் ..பொல்லாங்கு பேசமாட்டோம் ..என வைராக்கியம் பூண்டு ..மாயனின் பல்வேறு லீலைகளை சொல்லி பாடி மகிழ்ந்து ..நோன்பிருந்த நம் பாவைகள்..விரதநாட்கள் முடியும் தருவாயில் ..

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் ..கொடுத்த பரிசாக எண்ணி ..சூடகமும்..தோள்வளையும் ..தோடும்.செவிப்பூவும்  சூடி அலங்காரமிட்டு புது ஆடைகள் அணிந்து ..



 பால்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார !

அனைவரும்  கூடி இருந்து கொண்டாடி மகிழும் நாளே .." கூடாரவல்லி " எனும் திருநாள் ! மார்கழி 27ம் நாள்!


இந்த பால்சோறு என்றால் என்ன ..என்று பார்ப்போம் !

இதுவும் ஒருவகை சர்க்கரைப் பொங்கல்தான் !

பாலிலேயே செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல் !இதன் இன்னொரு பெயர் " அக்காரவடிசல்" !




எவ்வாறு செய்வது என்பது குறித்த காணொளி ..இங்கு இணைக்கப்பட்டுள்ளது !

இதை செய்து காண்பிப்பவர் ஸ்ரீ ரங்கம்  ராது மாமி ! இணைய உலகில் மிகவும் பிரபலமானது ..இவரது பல படைப்புகள் ! புது மணப்பெண்களுக்கும் ..சமைத்து சாப்பிடும் ஆண்களுக்கும் ..இவரது காணொளிகள் மிகவும் உதவி செய்கிறது ! யூ-ட்யூபில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் !







இரண்டு பகுதிகளாக காணொளிகள் கிடைக்கும்,,கண்டு செய்து உண்டு மகிழுங்கள் ! அற்புதமாக இருக்கும் ! ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் சந்நிதியில் அபூர்வமாகக் கிடைக்கும் !


பார்க்க இயலாதவர்களுக்காக !

தேவையான பொருட்கள் :
1.பச்சரிசி                  -  1 கப் 
2.பாசிப்பருப்பு          -  கால் கப்
3. பால்                       -  1 லிட்டர் 
4.நெய்                       -  150 மில்லி
5.உடைத்த வெல்லம் - 1 கப்
6.அஸ்கா சர்க்கரை - 1 கப்
(தண்ணீர் 2 கப், முந்திரி பருப்பு, ஏலக்காய் போடி, குங்க்குமப்பூ ..!)

செய்முறை:

1.முந்திரியை நெய்யில் வறுத்து தனியே வைக்கவும்.
2.வாணலியில் பாதி நெய்+பச்சரிசி+பாசிப்பருப்பு சேர்த்து சிறிது நேரம் வறுக்கணும்.
3.பால் 4கப் +தண்ணீர் 2கப் அதில் சேர்த்து 5நிமிடம் வேகணும்!
4.மொத்தக் கலவையை குக்கருக்கு மாற்றி 5,6 விசில் வரை வேகணும்!
5.மீண்டும் கலவையை வாணலிக்கு மாற்றி மீதி நெய் + பால் 2கப் சேர்த்து கொதிக்கனும். 5-7 நிமி
6. வெல்லம்+சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் கிளறணும்.
7.கெட்டியாகும் போது நெய்+முந்திரி +குங்க்குமப்பூ +ஏலக்காய் போடி சேர்த்து இறக்கிவிடலாம் 

8.ஆறினால் கெட்டியாகி விடும் !



Tuesday, January 8, 2013

பள்ளி வேலைநேர மாற்றம் ! இனி 10மாதங்களும் பாவைநோன்பே!

அடி..வெள்ளையம்மா வந்ததடி உன் காளைக்கு ஆபத்து.! கட்டபொம்மன் பட வசனம் இது!
பள்ளி வேலைநேர மாற்றம் பற்றிய திட்டம் குறித்து ஊடகங்களில் செய்தி வந்ததும்..அதை அறிந்ததும் என் மனதில் ஓடிய எண்ணமே அது !

 பெருகி வரும் மக்கள் கூட்டத்தில்..பள்ளிச் சிறார்களும், கல்லூரி கண்மணிகளும்..வேலைக்குச் செல்வாரோடு..காலை வேளைகளில் ..சாலையை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ! அதனால் அவதிகள்..ஆபத்துகள்..இழப்புகள்! 

குளிர் மிகுந்த வடமாநிலங்களில் காலை 7 மணிக்கு...சீருடை அணிந்தவாறு குழந்தைகள் கல்விச்சாலைக்கு நிதானமாகச் செல்வதை ..பல வருடங்களுக்கு முன்னரே ..கண்டிருக்கிறேன்..வியந்தும் இருக்கிறேன் !

 ஏழரை மணித்திட்டம் என்னவோ..ஏழரைசனீஸ்வரர் வந்து தாக்கியதைப் போல அலறுகிறார்கள்...வீட்டம்மணிகளும்..வாத்தியார்களும் !

வேலைக்குச் செல்லும் அம்மணியருக்கு..நேரத்திலேயே எழுந்திருப்பது பழகி இருக்கும்! வீட்டம்மணிகள் தான் பாவம்..அவர்களோட "ரொடீன்" எல்லாம் மாறிடும்னு பயப்படராங்க !

கர்மம் புடிச்ச டிவி சீரியல்களை விட்டொழிச்சீங்கன்னா...சீக்கிரம் தூங்கி..விழிக்கலாம்! உடலுக்கும்..மனசுக்கும் ஆரோக்யம் ! இதை என்னமோ தியாகம்னு எல்லாம் நினைக்க வேண்டாம்..! பரிகாரமா பகல்லே ரொம்ப நேரம் கிடைக்கும்.ஹாயா பொழுதைக் கழிக்கலாம்!

ஒரு அஞ்சு.அஞ்சரைக்கு எந்திரிச்சா போதும்..குழந்தைகளை எழுப்பிவிட்டு..சுடுதண்ணி போட்டு..பிறகு குக்கர் வெச்சா..சாப்பாடு ரெடி.! சமையலுக்கு அரை மணிநேரம்..இன்னொரு குக்கர்ல இட்லி வெச்சா..மூணு இட்லி சாப்டுட்டு..தயிர்சாதம் பாக்ஸ்லெ ஸ்கூலுக்கு!
ஆறே முக்காலுக்கு எல்லாம் பஸ்/வேன்/ஆட்டோ வர்றதுக்கு ரெடி ஆயிடலாம் !

ரெண்டு மாசம் சிரமமாயிருக்கும்..அப்புறம் பழகிடும் !

அடுத்ததாக..நம்ம குரு'க்களைப் பார்க்கலாம்..! சம்பள உயர்வு அறிவிப்பைத் தவிர...மற்ற எல்லா அறிவுறுத்தலுக்கும் அவங்க ஆதரவு கிடைக்கிறது..எதிர்பார்க்கவியலா சமாச்சாரம் !

ஸ்கூலுக்குப் பக்கத்துலேயே வீடு பார்த்துக்கோங்கோ..அவ்வளவு தான் சொல்லமுடியும்!

பெத்தவங்களுக்கும் அதே அட்வைஸ் தான்..! பக்கத்துல இருக்குற ஸ்கூல்லெ பசங்களை சேர்த்துவிடுங்க ! அமெரிக்காவுல அந்த அந்த ஏரியாஸ்கூல்ல தான் சேர்க்கிறது..ஓரளவு கட்டாயம் !  

அரசுக்கு ஒரு கோரிக்கை..எல்லா ஸ்கூல்லேயும் கட்டாய 'கேன்டீன்" வசதியும்,, அதிக அளவு " பாத்-ரூம்" வசதியும் அவசியமா செஞ்சு தரணும் !

அரசுப்பள்ளி/ கல்லூரிக்குன்னுத் தனியா ஸ்பெஷல் பேருந்துகளை இயக்கணும்..தனியார் பள்ளிகளுக்கு போக்குவரத்தில் தொடர்ந்து அதிகக் கண்காணிப்பும் அவசியம்!


பயப்படாதீங்க..மக்களே ! அருமையான திட்டம் !
பழைய காலம் மாதிரி 10 மணிக்கு முன்னாடி தூங்கப் போயிடுங்க..! காலை 5 மணிங்கிறது அதிகாலை அல்ல..'அதி உன்னத வேளை' ந்னு நெனைங்க..!

மத்தியான சாப்பாட்டுக்கு புள்ளைங்க வீட்டுக்கு வந்திடும்..படிக்க/விளையாடன்னு அதுங்களுக்கு ரொம்ப நேரம் கிடைக்கும்.! 

மத்தபடி பாதுகாப்பு கவனிப்பு.,..பத்திரம் எல்லாம் ரொம்ப ஜாஸ்தியா அவங்களுக்குக் கிடைக்கும்! உங்க சுகத்தை கொஞ்சம் ஒதுக்கி வையுங்க..அவ்வளவு தான்!

இனி..எல்லா நாளும் பாவை நோன்புதான்..ஆண்டாள் நாச்சியாரின் வழியில் நாமும் செல்வோம்!

வீட்டாம்பிளைகளா..கொஞ்சம் உங்க உதவியும் தேவை..மறந்திடாதீங்க! ரெண்டு மாடுகளும் இழுத்தாதான் குடும்ப வண்டி நகரும் ! 


Saturday, January 5, 2013

சங்கரமடம் அவ்வளவு இளக்காரமா ஆகிடுச்சா..மிஸ்டர் நல்லதம்பி !


முதல்ல அப்பா சொன்னாரு..அப்புறம் புதுவாரிசு ஆனந்தவிகடன்ல பதில் போட்டாரு..ஏமாந்து எரிச்சலான முதல் வாரிசு பேப்பர்காராளுக்கு அறிக்கை கொடுக்குறாரு!

என்னென்னு?

எங்க கட்சி ஆபீசு சங்கர மடமா' ந்னு?


ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஆங்கிள்லே சொல்றாங்கொ..ஆனா பாருங்க ..ஒரே வாக்கியமா சொல்றாங்கோ! இதைத்தான் " ப்ளட் இஸ் திக்கர் தென் வாட்டர்' நு சொல்றதா?

தானாடாவிட்டாலும் தன் நாவாடும்' என்பதும் இதே தானோ?


குதுரை ஆதீனத்தை விடுங்க..சொருணகிரி தான் கடைசி ஆதீனமா இருக்க ட்ரை பண்றார்..கூடிய சீக்கிரம் அறநிலையத்துறை நாட்டுக்கு அர்ப்பணிச்சிடும் !

 மத்த ஆதீனமாகட்டும்..மடமாகட்டும்..சர்ச்..மசூதி எங்க பார்த்தாலும்..அடுத்த பட்டம் பெரும்பாலும் பழைய பட்டத்தின் வாசமே இல்லாத இடத்தில் இருந்துதான் வர்றாங்க..!

அதுவும் இன்னார் தான் அடுத்த வாரிசுன்னு தெளிவா..சொல்லிடுவாங்க! அப்படியே சொல்லாம போய்ட்டாலும்..அடுத்த பட்டம் கட்றதுல பெரிய கலாட்டா எல்லாம் இருக்காது !


அப்படி ஏந்தான் கூட்டமா சேர்ந்து அப்படி ஒரு கேள்வி கேக்கறீங்களோ?

சரி..சங்கர மடம் இல்லை ..உங்க கட்சி...வேறென்ன?

வேறென்ன..பிரவேட் லிமிடெட் கம்பெனியா..இல்லை பார்ட்னர்ஷிப் கம்பெனியா?

பப்ளிக் லிமிடெட் கம்பெனின்னு சொல்லமுடியாது! லிமிடெட் பப்ளிக்கை தானே உள்வட்டத்தில் அனுமதிக்கிறீங்க?



தேவே கவுடா, முலயாம் சிங் யாதவ், காஷ்மீர் அப்துல்லா..குடும்பத்துல இப்படியா பப்ளிக்கா வெட்டு குத்து நடக்குது..கமுக்கமா முடிச்சுக்கல்ல! 

எம்ஜிஆரு தெளிவா செங்கோலைக் கொடுத்து காமிச்சாரே..யார் வாரிசுன்னு! அந்தத் தெளிவு இத்தனை நாள் கழிச்சாவது உங்க கட்சிக்கு வந்ததேன்னு சந்தோஷப்பட்டா..வாரிசு இல்ல..சங்கர மடமான்னு கேள்வி வேற கேக்கிறீங்க !


உங்க சண்டைக்கு சங்கரமடத்தை எதுக்கு இழுக்கிறீங்க? 


சரி..சங்கர மடம் இல்லைன்னு நாங்க..அதாவது மாக்களாகிய தமிழ் மக்கள் சொல்லணும்னா..அண்ணனும் வேண்டாம்..தம்பியும் வேண்டாம்...ஒரிஜினல்திராவிட  போராட்ட வாரிசு வைகோ இருக்காருல்ல ..அவரைக் கூப்பிட்டு ஒப்படைச்சிடுங்க ! 







Wednesday, January 2, 2013

அமெரிக்காவிற்கே ரூ28ஆயிரம் கடன் கோடி கொடுத்த கோவை !

 கோவைக்கே தனிப் பெருமை உண்டு ! யாராலும் எளிதில் நினைக்க..நிகழ்த்த முடியா காரியங்களை 'ஜஸ்ட் லைக் தட்'  டாக செய்து முடிப்பது !


பாசிட்டிவா சொல்லனும்னா 'பார்முலா 1 கார் பந்தய வீரரை உருவாக்கியது ; அரசாங்க ஆதரவு அதிகமில்லாமலேயே பஞ்சு மற்றும் இயந்திர தொழிலில் முன்னேறியது என பலப்பல !


 எங்க  ஊர் ஆளுங்க மூளையை..எக்சிபிஷன்ல வைக்கலாம்..! அப்படி நெளிவா ..சுளிவா கோளாறா எந்த காரியமும்  செய்வாங்க !
ஜி.டி.நாயுடு பத்தி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை !


செஞ்ச வேலையின் தகுதிக்கு   ஏற்றமாதிரி...பாராட்டும் கிடைக்கும் ..!
சிலசமயம் ஜென்மாந்திர ஜெயிலும் கிடைக்கும் !

அரசுக்குப் போட்டியாக ரூபாய் நோட்டு அடிச்சு மாட்டிக்கிட்ட பெரும்புள்ளிக எல்லாம் வசிச்ச ஊர் கோவை ! கவுண்டமணி கூட ஒரு படத்துல ,செந்திலைப் பார்த்து " ஏண்டா..கோயமுத்துர்ல பொறந்துட்டு அம்பது பைசாவா அடிக்கிறது ..ஊரு பேரக் கெடுக்காதிங்க-ன்னு ' அலப்பரை பண்ணுவாரு !

சுமார் முப்பது நாப்பது வருஷமா ..கோயமுத்தூர் காரங்களை ..மத்த ஊர்காரங்க கிண்டல் பண்றதுக்கு 'நோட்டு அடிக்கிற பசங்க' ன்னு தான் சொல்றது ..! ஏதோ சிலர் செஞ்சதுக்கு உரே பழி சுமந்தது !

அந்த தீராப் பழியை எளிதில் துடைத்தெறிந்து விட்டனர்..கோவை மக்கள் சிலர் ! அப்படி என்ன காரியம்னா ..அமெரிக்காவுக்கே கடன் கொடுத்திருக்காங்க ! அதுவும் எவ்வளவு ? ஒன்றல்ல ..நூறல்ல ..பல்லாயிரம் கோடி .!

.ரூ 28 ஆயிரம் கோடி !

அமெரிக்காவிற்கே ரூ28ஆயிரம் கடன் கோடி கொடுத்த கோவை !



அமெரிக்காவுக்கு பொருளாதாரப்பசி ! மசாலா கபே ' படத்துல வர்ற சிவா சொல்ற மாதிரி .."யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்குவாங்க ..கடனா "!

நம்ம பக்கத்து நாடு சீனா இருக்குது தானே !  அமெரிக்காவுல அந்த நாட்டு அரசாங்கம் வெளியிடும் கடன் பாண்டு பத்திரங்களை ..சீனா மிச்சமிருக்கும் அந்நிய செலவாணி பணத்தை வெச்சு ..வாங்கிப போடும் ..வருஷம் கொஞ்சமா ! இப்போதைக்கு சுமார் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொறுமான அளவிற்கு அமெரீக்காவுக்கு சீனா கடன் கொடுத்திருக்கு !


 இதைக் கண்டு கேட்டு ..மனம் பொறுக்காத கோவை பங்குச்சந்தை அன்பர் ஒருவர் ..இந்தியாவின் மனம் காக்க ,சென்னை தனியார் வங்கி மூலம் ..பணம் அனுப்பி அமெரிக்க கருவூல .கடன் பத்திரங்கள் வாங்கியுள்ளார் !
(US treasury Bonds)

 http://tamil.oneindia.in/news/2013/01/02/tamilnadu-5-bn-us-bonds-seized-from-tn-stock-broker-167205.html

கோவை இவ்வளவு நாளாக சுமந்து வந்த "கள்ள நோட்டுப் பழி ' துடைக்கப்பட்டு ' குபேரபுரி ' எனும் புதுப்பட்டம் வந்து சேர்ந்தது மிகவும் 
மகிழ்ச்சியாகவும் ..பெருமையாகவும் இருக்கிறது !


ஃபாலோ- அப் !  

06/01/2013

$5-bn US bonds seized from TN stock broker


http://www.indianexpress.com/news/-5bn-us-bonds-seized-from-tn--stock-broker/1053200/

முதலில் வந்த செய்திகள் கொடுத்த பெருமையின் ஆயுள்..விட்டில் பூச்சி போல சிலநாட்கள் தான் போலும் ! மேற்கொண்டு வரும் தகவல்கள்..அந்தப்பத்திரங்கள் போலியாக இருக்குனென்ற கருத்தைச் சார்ந்து வருகின்றன. போலி என்று நிரூபணமானால்..குபேரபுரி" எனும் பெருமை தகர்ந்து..ப்ராடுபுரி" என்பதே நிலைத்து விடும் வாய்ப்பு உள்ளது!