Sunday, May 4, 2014

உயிரைக் காட்டுவாயா?

ஏதோவொரு கணத்தில், எல்லோருள்ளும் இந்தக் கேள்வி எழாமல் இருந்திருக்காது!
அதுவும் ஒரு மரணநிகழ்வில், சோகத்தின் அருகில் துணை நிற்கும் போது!

சிலமணி நேரம் மனிதத் தன்மையின்...உச்சத்தில் நாம் உலவும் காலமும் அதுவே! மறுபடியும் குளித்து முடித்த பின்பு ...மீண்டும் பழைய நிலைக்கு அதாவது சகஜநிலைக்கு வந்துவிடுகிறோம்!


 ஏதொ ஒரு துளிர்ப்பில், பிறப்பில் கூட...கேள்விகள் மெல்ல தலை தூக்கும்!

எங்கே வந்தாய்...
எங்கே செல்கிறாய்...
உயிரே?!

ஒன்று சேரும்போதும் விலகும் போதும் இதே உணர்வுகள்!


உயிர் எங்கில்லை...அசையும் அனைத்திலும் இருக்கிறது...!.அசையாதவைகளின் மௌனசாட்சிகளோடு !

எந்த வடிவில் இருக்கிறது? எப்படி இருக்கிறது?
ஏன் வருகிறது? எங்கே போகிறது?
பதில் வேண்டுமா..?

அதோ தெரிகிறது பார் அந்த உயரத்தில்..
மலைமுகட்டில்...உச்சாணியில்!
போ..போ ..உடனே போ!
மெல்ல எழுந்து போ..நடந்து போ!
முகட்டிற்கு ஏறிப்போ!

கண் இருட்டுகிறதா...
நாக்கு வறளுகிறதா...
கால் தள்ளாடுகிறதா..
பூமி நழுவுகிறதா...
தலை சுற்றுகிறதா...
மூச்சு இறைக்கிறதா?

உச்சத்தை அடைந்து விட்டாயா...
சுற்றும் முற்றும் பார்
என்ன தெரிகிறது
எல்லாமே தெரியும்...!

ஒரு நியதி தெரியும்
கட்டுப்பாடு தெரியும்
இயக்கம் தெரியும்
உண்மை புரியும்!
அமைதி தெரியும்
ஆதில் அடங்கி இருக்கும்
ஆர்ப்பரிப்பு உணரும்!

உயிரைக் காட்டுவாயா?

இப்போது 
இதயத்தின் படபடப்பு குறைந்திருக்கும் 
வழியும் வேர்வை அடங்கியிருக்கும்
சுவாசம் சீராகி இருக்கும்...

இப்போது புரிந்திருக்குமே...ஆம் அதே தான்!
குளிராக உள்ளே சென்று, நம்மை இயக்கி
வெப்பமடைந்து வெளியேறுகிறதே அதே தான்!
பஞ்சபூதத்தின் பிரத்யேக அம்சமான..
அந்த வாயுவே தான்
காற்றே தான் !
 
அண்டவெளியில் இருக்கும்
அதுவே பரமாத்மா!
நம்மில் வந்தால்
அதுவே ஜீவாத்மா!