Thursday, July 17, 2014

பேச்சு... பேச்சாகத்தான் இருக்கணும்!


பேச்சு... பேச்சாகத்தான் இருக்கணும்!
பேசி முடிச்ச பின்னாடியும்!

பேசறதுக்கு முன்னாடி பல வகை பிரயோகங்கள் முனைப்புகள்  இருக்கலாம்..
இல்லாமலும் இருக்கலாம்..ஆனா பேச ஆரம்பிச்சுட்டா..பேச்சோடு மட்டுமே முடிக்கணும்!
நாளைக்கு மறுபடியும்  பேசிக்கிறது போல ...நம்ம பேச்சின் போக்கு அமையணும், அமைச்சுக்கணும்!
அந்த பக்குவம் நமக்கு இல்லைன்னா...பேசறதுக்கே உட்காரக் கூடாது!


விவாதம்னு ஏதாவது வந்தால்...முதல்லே விவாதம் செய்ய வந்த ஆளைப் பாருங்க...அவங்களோட தீவிரத்தன்மையை முதல்ல கணிச்சு வெச்சுக்கங்க! வார்த்தைகளை எண்ணி எண்ணி பேசுங்க! கோபம் வரும்..வந்தா வார்த்தைகள் சிதறும்! கோபத்தைக் கட்டி மேய்க்கிறதுல தான் நம்ம வெற்றி அடங்கி இருக்கு!

 
வட இந்தியர்கள் பொதுவாக வணிகர்கள்..பேச்சே சத்தமாக, சண்டைக்கு வருவது போல இருக்கும்! ஆனா...மணிக்கணக்கா பேசினாலும், பேச்சோடு முடிந்து போகும்! அதுக்கு மேல சேதாரம் இருக்காது!

ஆனா..நம்மாளுக பேசிக்கிட்டா காயத்தோடு தான் (மனசு...சிலசமயம் உடம்பும்) எழுந்திருக்காங்க! பக்குவம் வரணும்!

ஒரு கட்டதுக்குள் எல்லைக்குள் இருந்து பேசறவங்க கிட்ட..நீங்க என்ன தான் அன்பாக பணிவாக பேசினாலும் எடுபடாது!

பேச்சு... பேச்சாகத்தான் இருக்கணும்!

பேச்சு ஏன் தோல்வி அடையுதுன்னா...நாம நெனைக்கிறது பேசறது மட்டுமே சரின்னு, ஒரு தரப்போ இல்லை ரெண்டு மூணு தரப்பிலும் நெனச்சிட்டா போதும்!

என்ன பிரச்சனை ஆனாலும் கடைசியா முடிக்கப்படறது பேச்சு வார்த்தைகளில் தான்! சோ...அந்த பேச்சு வார்த்தையே பிரச்சனை ஆகிவிடக் கூடாது!பேசறவங்க எல்லோரும் எல்லா நேரத்துலயும் ஒரெ மாதிரி பேசறது இல்லே! பேச்சு திசை மாறிடுச்சுன்னா...பேச்சை முறிச்சுக்கக் கூடாது! நேரங்காலம் தள்ளிப் போட்டு , இடத்தை மாற்றி பேசலாம்!

இல்லை .ஆசையை கோபத்தை நம்ம ஆதங்கத்தை, இழப்பை,எரிச்சலை வடிகாலாக்கியேத் தீரணும்னால்...நேரடியா முகத்துக்கு எதிராக பேசறதை தவிர்க்கணும்! கவுண்டமணிஅண்ணன் நாட்டாமைலே சொல்ற மாதிரி..செல்போன் வழியாக பேசிக்கறது கொட்டறது நல்லது!

கடைசியாக ஒன்று! அக்கம்பக்கம் பார்த்து ஆளைப் பார்த்து நேரங்காலம் வசதிகளைப் பார்த்து ...பேசறது நல்லது! அதே மாதிரி நம்மளை பாதிக்காத விஷயத்துக்கு, பேச்சை வளர்ப்பது சரியல்ல!

ஆத்திரம் கொண்டவனிடம் அமைதியாகவே பேச வேண்டும்! 
முட்டாளை பேச விட்டுவிட வேண்டும்!
அறிவாளிகளை பேச வைக்க வேண்டும்!


எப்பங்க பேசலாம்?
Like 

Sunday, May 4, 2014

உயிரைக் காட்டுவாயா?

ஏதோவொரு கணத்தில், எல்லோருள்ளும் இந்தக் கேள்வி எழாமல் இருந்திருக்காது!
அதுவும் ஒரு மரணநிகழ்வில், சோகத்தின் அருகில் துணை நிற்கும் போது!

சிலமணி நேரம் மனிதத் தன்மையின்...உச்சத்தில் நாம் உலவும் காலமும் அதுவே! மறுபடியும் குளித்து முடித்த பின்பு ...மீண்டும் பழைய நிலைக்கு அதாவது சகஜநிலைக்கு வந்துவிடுகிறோம்!


 ஏதொ ஒரு துளிர்ப்பில், பிறப்பில் கூட...கேள்விகள் மெல்ல தலை தூக்கும்!

எங்கே வந்தாய்...
எங்கே செல்கிறாய்...
உயிரே?!

ஒன்று சேரும்போதும் விலகும் போதும் இதே உணர்வுகள்!


உயிர் எங்கில்லை...அசையும் அனைத்திலும் இருக்கிறது...!.அசையாதவைகளின் மௌனசாட்சிகளோடு !

எந்த வடிவில் இருக்கிறது? எப்படி இருக்கிறது?
ஏன் வருகிறது? எங்கே போகிறது?
பதில் வேண்டுமா..?

அதோ தெரிகிறது பார் அந்த உயரத்தில்..
மலைமுகட்டில்...உச்சாணியில்!
போ..போ ..உடனே போ!
மெல்ல எழுந்து போ..நடந்து போ!
முகட்டிற்கு ஏறிப்போ!

கண் இருட்டுகிறதா...
நாக்கு வறளுகிறதா...
கால் தள்ளாடுகிறதா..
பூமி நழுவுகிறதா...
தலை சுற்றுகிறதா...
மூச்சு இறைக்கிறதா?

உச்சத்தை அடைந்து விட்டாயா...
சுற்றும் முற்றும் பார்
என்ன தெரிகிறது
எல்லாமே தெரியும்...!

ஒரு நியதி தெரியும்
கட்டுப்பாடு தெரியும்
இயக்கம் தெரியும்
உண்மை புரியும்!
அமைதி தெரியும்
ஆதில் அடங்கி இருக்கும்
ஆர்ப்பரிப்பு உணரும்!

உயிரைக் காட்டுவாயா?

இப்போது 
இதயத்தின் படபடப்பு குறைந்திருக்கும் 
வழியும் வேர்வை அடங்கியிருக்கும்
சுவாசம் சீராகி இருக்கும்...

இப்போது புரிந்திருக்குமே...ஆம் அதே தான்!
குளிராக உள்ளே சென்று, நம்மை இயக்கி
வெப்பமடைந்து வெளியேறுகிறதே அதே தான்!
பஞ்சபூதத்தின் பிரத்யேக அம்சமான..
அந்த வாயுவே தான்
காற்றே தான் !
 
அண்டவெளியில் இருக்கும்
அதுவே பரமாத்மா!
நம்மில் வந்தால்
அதுவே ஜீவாத்மா!






Monday, January 27, 2014

சுப்புசாமி கோபுசாமி !

பொறந்த குழந்தை...அஞ்சு வருசமானதும்
ஒண்ணாம் வகுப்பில் சேர்க்கணும்!
சமைஞ்சபையனை .. .அஞ்சு வருஷமாச்சும்
பொத்திபொத்தி வளக்கணும்!
மாஸ்டர் டிகிரிக்கு...அஞ்சுவருஷமாச்சும்
காலேஜுல சேர்ந்து படிக்கணும்!
சுதந்திர தேசம்னா..அஞ்சுவருஷமானதும்
தேர்தல் நடத்திப் பார்க்கணும்!

நாலு மாசத்துல தேர்தல் வரப்போது ங்கறதை 
நாலு மாசத்துக்கு முன்னாடி இருந்தே..
மீடியாக் காரன் கதறிட்டு நாட்டுக்கு
உடுக்கை அடிச்சு உலுப்பி சொல்லிட்டிருக்கான்!

மார்ச் மாசத்துல முடியுற நிதிஆண்டு வருமானவரிக்கு. ..
செப்டம்பர்லே அட்வான்ஸ்டேக்ஸ் கட்டுற கதையா,
2014 எலக்ஷனுக்கு, 2013லேயே 
கூட்டணி கும்மாளங்களுக்கு, கும்மாங்குத்துக ஆரம்பிச்சிட்டாங்க!

தேர்தலுக்கு நாலு மாசம்..அதுக்கப்புறம் ரெண்டு மாசம்..நமக்கெல்லாம் நல்ல செய்தித் தீனி, கருத்து திணிப்பு எல்லாம் கிடைக்கும்! அதென்ன தேர்தலுக்கு அப்புறம்..ஆமாங்கண்ணோவ்! யாருகிட்ட மெசாரிட்டி இருக்கப் போவுது?

யாரோ..ஜெயிக்கட்டும்..ராசாவாகட்டும், நமக்கு அது கவலை இல்லை, இன்ட்ரஸ்டும் இல்லே! எப்படியும் "பெவிகால் ஜாயிண்ட்"கள் தான் ஆளப் போவுது...இதுல நமக்கு எதுக்கு சைடு பேக்கிங்?(அணி ஆதரவு)

கண்ணை மூடிட்டு...நம்ம சனநாயகக் கடமைக்கு, சாவடிக்குள்ளே புகுந்து, பட்டனை ஒரே ஒரு தடவ,தடவிட்டு வந்துடணும்! அதுக்கு சாட்சியா..ஆபீசருங்க பொட்டு வெச்சு, மரியாதை செஞ்சு அனுப்புவாங்க!

என்ன உளறிட்டு இருக்குறே...சொல்ல வந்ததை சுருக்கால சொல்லிட்டு போய்யானு, நீங்க கடுப்பாகிறது எனக்கு கேக்குது!

இன்னும் ஆறு மாசத்துக்கு, நடக்குற அரசியல்  கூத்துக்கதைக்களுக்கு எல்லாம் "ஜெர்க்" ஆகி..யாருகிட்டயும் விவாதம்,சச்சரவு எல்லாம் செஞ்சுக்காம...ஜாலியா எடுத்துக்கிட்டு எஞ்சாய்" செஞ்சுக்கிடுங்க...என்ன நாஞ்சொல்றது?
சுப்புசாமி VS கோபுசாமி

ஒவ்வொரு தேர்தல்லேயும், ஏமாளியாக்கப்படற நம்ம கோபுசாமி அண்ணன்...இந்த தடவ, வெளியூர் ஆட்டக் காரங்களோட வேகமா போயி, காண்ட்ராக்ட் போட்டுட்டார்! முதல்ல எல்லோரும், சந்தோசப்பட்டாங்க..பெருசா விமர்சிக்கல!

அப்புறம் மெதுவா..ஆரம்பிக்கறாங்க மீடியாக்காரங்க! என்னான்னு? 
கோபுசாமி அண்ணே...அந்த வெளியூரு ஆட்டக்காரங்க, மடியிலே சுப்புசாமின்னு" ஒரு பூனைய செல்லமா உட்கார்ந்துட்டு இருக்கே...பாக்கலையா? 
அதை கிட்ட வெச்சுக்கிட்டு, எப்படி "தேர்தல் சகுனம்" பாத்துக்கிடுவீங்கனு, கேள்வியா கேக்கறாங்க..சீண்டிப் பாக்குறாங்க!

எப்படி சமாளிக்கப் போறாரோ..நம்ம கோபுசாமி அண்ணன்! இதுக்கு இடையிலே, நம்ம அரேபியசாமி  கட்சிக்காரங்க வேற..கோபு அண்ணனை நெருக்குறாங்க! கோபுஅண்ணன் புதுசா கண்டிராக்ட் செஞ்ச ஆளுக, ஆட்டக்காரங்க மட்டுமில்லையாம்! பில்டிங் டெமாலிஷும் சைடு பிஸினஸாசெஞ்சிட்டு இருக்காங்களாம்...அதனால அவங்களோட நீங்க சேரக்கூடாதுனு சொல்றாங்க!

ஆனாப் பாருங்க..நீங்க அவங்களோட சேரலைனா, எங்களோட 13 சத வாக்குகளும், உங்களுக்கே, அப்படின்னு மட்டும் சொல்ல மாட்டாங்களாம்!

கோபு அண்ணே..சிறந்த பார்லிமெண்டேரியன்,  சிறந்த பேச்சாளரான நீங்க...கண்டிப்பா தேர்தல்லே நிக்கணும்! கூட்டணி இல்லைன்னா யாராலும் ஜெயிக்க முடியாது, அரசாளமுடியாதுனு வந்துட்டப்புறம்...நீங்க ஒண்ணும் பயந்துக்கிடாதீங்க!

கண்ணாலம்னு..போயாச்சுனா, அங்கே எல்லா "கவிச்சிக்"காரங்களும் வரத்தான் செய்வாங்க! குறுக்கநெடுக்கா திரிவாங்க! காதுல படறமாதிரி குசலம் பேசுவாங்க! வேடிக்கையிலும்,மோளசத்தத்திலேயும் கவனத்தை வெச்சு, சபையில மருவாதி வாங்கிக்கணும்!


சுப்புசாமி அண்ணே! உங்களுக்கு கவர்னர் போஸ்ட் கிடைக்குமுங்க...வாலை கவனமா சுருட்டி வையுங்க! வாய் பதனம் கட்டாயம்! 


இப்போ போயிட்டு நாளான்னிக்கு வர்றனுங்கோ! கொசுக்கடி தாங்க முடிலை..!








Wednesday, January 8, 2014

ஆடையின்றி பிறந்தோமே...!


தொல்லையின்றி பிறந்தோமா...?!

பிறக்கையில், வளர்கையில் தாய்க்கு தொல்லை தந்தோம்!

கல்விக்கு தந்தையையும்,
கலவிக்கு துணையையும்,
வளமாய் வாழ உடன்பிறப்புகளையும்,
வெளியே உறவுகளையும்,
வயோதிகத்தில் பிள்ளைகளையும்...
நோகடித்து விடுகிறோம்!


மழையின்றி சபிக்கப்பட்ட தமிழ்நாடு!

ஆயிற்று இரண்டு வருடம்...மழைப் பொழிவைக் கண்டு! அவ்வப்போது சிறு தூறல்கள் வந்து ஆவலைக் கிளப்ப முயன்று தோற்று விட்டன!
விவசாயி விட்டு விட்டான்....நம்பிக்கையை அல்ல! விவசாயத்தை!
30ல்..20 மாவட்டங்களில் தை மாசியிலேயே தண்ணீர் பஞ்சம் வந்துவிடும் போலிருக்கு!
வாழ்க எல் -நினோ ! இயற்கையின் சித்து விளையாட்டு!

 ஆடையின்றி பிறந்தோமே...!

 ஆயாசப்படுத்துகிறது கூட்டணி அனுமானங்கள் !

தேர்தல் வருடம்...! மீண்டும் அதே முகங்கள்..அதே ஆசைகளுடன்..ஆனால் முகமூடிகளை வேஷங்களை கோஷங்களை சற்று மாற்றி போட்டு !
அதிகார வெறி... பணவெறி இரண்டும் கூட்டணி அமைத்து, சாதி/மத வெறியாக பரிணமித்து உள்ளது!

எவன் எவனோட சேர்ந்தா ...நமக்கென்ன!
எவன் கிட்ட இருந்து எவ்வளவு ஓட்டுலஞ்சம் கிடைக்கும்...இலவசம் எவ்வளவு கிடைக்கும்..இது தாண்டா மக்கள்!

புகை விலகியதாம்...இளைஞர்களை விட்டு!

33 லிருந்து, 23 சதமாகக் குறைந்துள்ளதாம்..இந்த பத்தாண்டில்..இளைஞர்களிடையே புகைக்கும் பழக்கம் ! வாழ்த்துக்கள்...ஒருவேளை பெண்சிநேகம் கிடைப்பது எளிதாகிப் போனதால், இது நடந்தேறி இருக்குமோ? எதுவானால் என்ன..நல்லது நடந்தால் சரி!

ஆம் ஆத்மி..

இந்திப் பெயரில் ஒரு இயக்கம்! அவசரத்தில் பிறந்து..அதிரடியாக வளர்ந்து வருகிறது இதுவரை விசில் அடிச்சான் குஞ்சுகளுக்காக அதிரடி பேட்டிங் செய்துவரும் கேஜரிவால், அடங்குவாரா இல்லை அடக்கப்படுவாரா..இல்லை விஸ்வரூபம் எடுப்பாரா?

எதாவது ஒரு மாற்றுசக்தி வேண்டும்...நிதானித்து நீண்ட கால திட்டங்கள் அடிப்படையில் முயற்சிப்பது நலம்! கூடவே பிரகாஷ் காரத்தையும் இணைத்துக் கொள்ளலாம்..அவர் சீன அபிமானத்தை விட்டு வந்தால்!

நடிகனுகளுக்காக சண்டை!

ஓயல..ஓயல..ஓயாது! அஜித்/விஜய் படங்கள்..டீசர்கள்..டிரெயிலர்கள்..தியேட்டர்கள் என அடிச்சிக்கிறானுகோ..! 70 அடிக்கு கட் அவுட், பாலாபிஷெகம்..அட ராமசாமி..எங்கேப்பா இருக்குறே!

எந்த ஆக்டரு படத்துக்கு, பிளாக்லே அதிக விலைக்கு டிக்கெட் விக்குதுனு எல்லாம் பேசிக்கிறானுவோ...கெரகம் பிடிச்சவனுக!

நாய்க்கு பட்டுக்குஞ்சம்னு பேராம்!

கொடூரன் ராஜபட்சிக்கு..பாலஸ்தீனத்தில் பாராட்டு, விருது, வீதிக்கு அவனோட பேரு! இதுவரைக்கும் இஸ்ரேல் தான் இலங்கைக்கு உதவுது..அப்படிங்கிற அவப்பெயரை துடைக்க, தமிழ் மக்களைக் கொன்னது சரிதான்னு, முஸ்லீம் நாடும் கிளம்பிடுச்சு!

பாலஸ்தீனத்துக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம்...இதுலா இலங்கைக்கு சப்போர்ட்டு வேற! நல்ல இருங்கடா?!

ராகுலை பிரபலப்படுத்த காங்.திட்டம்!

கோடி கோடியா செலவு செய்யப் போறாங்களாம்! தங்கச்சியம்மா பிரியங்காளுக்கு வேற சலங்கை கட்டி, மேடையில இறக்கிவிட்டு இருக்காங்க! 

பையனை பிரபலப் படுத்தொணும்னா ஒரே வழி..டெய்லி ஷேவிங் செய்யச் சொல்லுங்க...ஒரு கண்ணாலத்தை செஞ்சு வெச்சீங்கண்ணா..பக்குவம் வந்துடும்! அஞ்சு வருஷம் ரெஸ்ட் எடுத்துட்டு மறுபடியும் வாங்க! பை பை..கலாய்ச்சி பை!

வைகோ அண்ணாச்சி!

அவரும் எத்தனை நாள் ..நடந்து கிட்டே இருப்பாரு!? பாஜகவோட நின்னு ஜெயிக்கணும்! மத்திய மந்திரி ஆகணும்! இலங்கையை மிரட்டணும்! கனவு காண்றதில் தப்பில்லை ..அது எங்க இஷ்டம்! கல்லைக் கீழே போடுங்க!


சர்க்கரைப் பொங்கல் செய்யும் முறை ..பாரம்பரிய முறையில் !


பொங்கல் பரிசு!

அடுத்த வருஷமாவது..குடும்பத் தலைவருக்கு குஷிப்படுத்த ஒரு குவாட்டரும், குடும்பக் குழந்தைகளுக்கு சத்து கூட்ட ஒரு கோழியும் கொடுத்தா  நல்லா இருக்கும்! 
அதிகாரம் கவனிக்குமா?


எத்தனை நாள் தான் ஒரே ஸ்டைல்லே எழுதறது?

மாற்றம் தேவை..அதனால் ஒரு கன்னி முயற்சி !
நல்ல கருத்தா சொன்னீங்கனா...சந்தோசம்,மகிழ்ச்சி!